Wednesday, September 14, 2011

தினம் ஒரு மூலிகை ( அழிஞ்சில் )

13. அழிஞ்சில்

(தாவரவியல் பெயர் : Alangium salviifolium )

நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. வேர்ப்பட்டை, இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

வாதநோய் நீக்கி உடல் தேற்றுதல், வாந்தி உண்டு பண்ணுதல்,பித்த நீர்ச்சுரப்பை மிகுத்தல், மலமிளக்குதல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல், காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவக் குணங்களையுடையது. அழிஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேல் கொடுத்தால் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடவேண்டும்.

1. வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை ஒரு வாரம் கொடுத்து வரக கடி விஷங்கள், தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.

2. இலையை அரைத்து ஒரு கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.

3. சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராம், கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சம அளவு கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில் சாப்பிட்டு வரத் தொழு நோய் குணமாகும்.

4. அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் படும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல்நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment