Saturday, September 17, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆமணக்கு)

17. ஆமணக்கு

(தாவரவியல் பெயர் : Ricinus communis)

கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண்பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டை முத்து எனப்படும். இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் (விளக்கெண்ணெய்) மலமிளக்கும். தாது வெப்பகற்றும்.

1. இலையை நெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும்.

2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டிவர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.

4. ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் அளவு காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.

5. 30 மி.லி விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.

6. கண் வலியின் போதும், கண்ணில் தூசி விழுந்த போதும் ஓரிரு துளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.

7. தோல் நீக்கிய விதையை மெழுகுபோல் அரைத்துப் பற்றுப் போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும், மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.

8. வேரை அரைத்துப் பற்றுப் போட பல்வலி நீங்கும்.

No comments:

Post a Comment