Wednesday, September 14, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆடாதொடை )

15. ஆடாதொடை

(தாவரவியல் பெயர் : Adhatoda vasica )


ஆடாதோ டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற்

கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்-நாடின

மிகுத்தெழுந்த சந்நிபதின் மூன்றும் விலக்கும்

அகத்துநோய் போக்கு மறி

நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயல் படும்.

1. இலைச்சாறும் தேனும் சம அளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.

2. இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.

3. 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன் கலந்து காலை, மாலை 40 நாட்கள் பருகி வர என்புருக்கிக் காசம் (T.B.) இரத்த காசம், சளிச்சுரம், சீதளவலி, விலாவலி ஆகியவை தீரும்.

4. ஆடாதொடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமஅளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணமாகும்.

5. ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிக் காலை, மாலை பருகி வரக குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி தீரும்.

6. உலர்ந்த ஆடாதொடை இலைத்தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே நிற்கும்.

7. 700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம், இலவங்கம் 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைத் தூள் செய்து போட்டுப் போன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி (ஆடாதொடை மணப்பாகு ) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும். ஒரு நாளைக்கு 3 வேளையாகநீண்ட நாட்கள் கொடுத்து வர காசம், என்புருக்கி, மார்ச்சளி, கப இருமல். நீடித்த ஆஸ்துமா, நிமோனியா ஆகியவை குணமாகும். குரல் இனிமை பெறும்.

8 ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. அளவாகப் பருகி வர எவ்விதச் சுரமும் நீங்கும். இது அஷ்ட மூலக் கஷாயம் எனப்படும்.

9. வேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை, மாலை கொடுத்து வரச் சுகப்பிரசவம் ஆகும்.

No comments:

Post a Comment