Friday, August 26, 2011

தினம் ஒரு மூலிகை ( அருகம்புல் )


1. அருகம்புல்

(தாவரவியல் பெயர்: Cynodon dactylon)

அருகம்புல் வாதபித்த ஐயமோ டீளை

சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்

கண்ணோ யோடு தலைநோய் கண்புகை யிரத்தபித்தம்

உண்ணோ யொழிக்கு முரை

குறுகிய நீண்ட இலைகளையுடைய நேராய் வளரும் தண்டுகளையும் உடைய ஒரு புல் வகை. ஆனைமுகக் கடவுளுக்குப் பூசனை மூலிகையாகப் பயன்படுவது.

தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயல்படும்.

1. கணு நீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் காத்து, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பம் தணியும், மாதவிலக்குச் சிக்கல் நீங்கும்.

2. கணு நீக்கிய அருகம்புல் சமூலம் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாட்கள் சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும். அறிவு மிகுந்து முகம் வசீகரமாகும்.

3. அருகம்புல் சமூலம் 30 கிராம், கீழா நெல்லிச் சமூலம் 15 கிராம் இவற்றை விழுதாய் அரைத்துத் தயிரில் கலக்கி காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர்த் திரையில் உள்ள புண்ணால் நீர்க்கடுப்பு, சிறுநீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

4. அருகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும்.

5. வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச் சொறி, சிரங்கு, தோல் நோய், வேர்க்குரு, தேமல், சேற்றுப் புண், அரிப்பு, வேனல் கட்டி ஆகியவை குணமடையும்.

6. அருகம்புல் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும். (மருந்து வீறு: கடும் மருந்துகளை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்).

7. அருகு சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம் இடித்து 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் கடும் வெயிலில் வைத்து 45, 90, 150 நாட்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.

8. 1கிலோ அருகம்வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு 1 லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து 1லிட்டர் நல்லெண்ணெய் கலந்து அமுக்குராக் கிழங்கு, பூமி சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறு தீயில் பதமுறக்காய்ச்சி வடித்து எடுத்த எண்ணெயை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சு வலி, வயிற்று எரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைச் சூடு, நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்.

9. அருகம்வேர், நன்னாரி வேர், ஆவாரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம், 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லியாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.

1 comment:

  1. அருகம் புல் அவ்வளவு மருத்துவ குணம் கொண்டதா !!! கைகளில் வெண்ணை வைத்து கொண்டு நெய்யுக்கு அலைந்த கதை நம் நாட்டவரின் கதை நன்றிகள் புரிய வைத்த உகளுக்கு தொடரட்டும் உங்கள் மூலிகை மருத்துவ தொண்டு

    ReplyDelete