Saturday, August 20, 2011

இயற்கையை மீறுவதால்....


இயற்கை விவசாய முறையையும், இயற்கை உரங்களையும் பயன்படுத்த தவறிவிட்ட நாம் விவசாய புரட்சி என்று சொல்லி மரபணு மாற்றம் செய்யப்பட்ட BT கத்தரிக்காய் ஏற்படுத்திய ஒவ்வாமை (அலர்ஜி ) மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளையும், இரசாயன உரங்களையும் பயன்படுத்தி நம் உண்ணும உணவுகளில் நமக்குத் தெரியாமலேயே நச்சுத் தன்மையை ஏற்படுத்திக் கொண்டோம். இதன் பக்க விளைவுதான் மலட்டுத்தன்மை, புற்று நோய், உடல்பருமன், சிறுவயதில் பெண்குழந்தைகள் பூப்பெய்துதல் போன்ற உடல் கோளாறுகளை நாம் காண முடிகிறது...(இந்த இயற்கை விவசாயத்திற்கும், உரங்களுக்கும் ஆதரவாக இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களும், பேராசிரியர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களும் இன்னும் பலரும் எடுத்து வரும் முயற்சி தமிழகத்தில் இயற்கை விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என் நாமும் வாழ்த்துவோம்.)

கார்பைடு கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம், இன்னும் பழங்களை விரைவாகப் பழுக்க வைப்பதற்காக உபயோகிக்கப்படும் இரசாயன கல் (கார்பைடு), காய்கறிகளுக்கு குறிப்பாக முட்டைகோசு, பூகோசு,கத்தரிக்காய் செடிகளுக்கு பாஸ்பேட் போன்ற செயற்கை இரசாயனங்களை சேர்ப்பதாலும், மாடுகளின் கறவையை அதிகப் படுத்துவதற்க்காகவும், கறிக்கோழிகளின் (பிராய்லர்) குறுகிய கால வளர்ச்சிக்கும்உபயோகிக்கப்படும் ஊசிகளும் நம் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை...
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், நொறுக்குத் தீனிகள், புட்டிகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்கள், தண்ணீர் போன்றவையும் நமக்கேற்படும் உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணிகளாகும். (உதாரணமாக எண்ணையில் பொரித்த பைகளில் அடைக்கப்பட்ட குர்குரேயை எரித்துப் பார்த்தோமானால் ஒருவித பிளாஸ்டிக் துர்நாற்றம் வரும். மேலும் ஒரு குர்குரே எரியும்போதே குறைந்தது இரண்டிலிருந்து மூன்று சொட்டு எண்ணை வெளிவரும்.)ஒரு குர்குரேவிற்கே இப்படியென்றால்.....ஒரு முழு பாக்கெட் குழந்தைகளின் வயிற்றுக்குள் போனால்....

இப்படி உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடிய உணவு முறைகளை சிறிது மாற்றி இயற்கையின் கொடையான நிகரற்ற நற்குணம் வாய்ந்த மூலிகை கீரைகளைச்
சமைத்தும்,துவையலாகவும்,பொடியாகவும் உணவில் கலந்து சாப்பிடுவதன் மூலம், சித்த மருத்துவம் உணவு மருத்துவமாக மாறுகிறது.மேலும் நமது அன்றாட வாழ்வில் அறுசுவைகளான இனிப்பு, புளிப்பு, உப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு இவைகளைச் சமஅளவு சேர்த்துக் கொள்வதின் மூலம் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமன் செய்து நோயின்றி வாழ முடியும். ஏனெனில் இவற்றில் ஏதேனும் ஒன்று மிகினும் குறையினும் நோய் வரும் என்பது சித்தர்களின் சித்தாந்தம். இதனை சான்றோர்கள் சித்த மருத்துவம் பெண்களின் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் அடங்கும் எனக் கூறுவர். இதனையே வள்ளுவர் உண்ட உணவு நன்றாகச் சீரணித்த பின் அடுத்த வேளை உணவு உண்ண வேண்டும் என்று பின்வரும் திருக்குறள் வழியாக உணர்த்துகிறார்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
மேலும் நோய் வந்த பின் சிகிச்சைப் பெறுவதை விட, நோய் வருமுன் காப்பதே சிறந்ததாகும் என்பதனை
நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். - என்று கூறுகிறார்.
இப்படி மருந்தாகும் மூலிகை உணவுகளை மறந்து அன்னிய உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறி அதனால் புதிய புதிய நோய்களை அன்பளிப்பாகப் பெற்று அல்லலுறுகிறோம். இனிவரும் நாட்களில் நம் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறி நோயில்லாத சமுதாயம் செய்வோம்.

2 comments:

  1. இன்றைய இளைய தலைமுறையினர் நாகரீகம் என்கிற பெயரில் மேலை நாட்டு உணவுகள் மற்றும் மேலை நாட்டு மருத்துவங்களையும் மிக அதிகமான முறையில் பயன் படுத்தி நமது பாரம்பரய உணவு மற்றும் மருத்துவங்களை மறந்தே போய் விட்டனர். உங்களை போன்றோர் நமது பாரம்பரிய அரிய மருத்துவ நிலைகளை இது போல நினைவு படுத்தீ மக்களுக்கு ஒரு புதிய சிந்தனை மற்றும் நல வாழ்வு முறைகளை மீண்டும நம நாட்டு மருந்த்வமான மூலிகை / சித்தா போன்ற பக்க விளைவுகள் இல்லாத நிவாரணிகளை போதிக்க இது போன்ற இணைய தள பதிவுகளை தந்தமைக்கு வாழ்த்துகிறேன்...மேலும் மேலும் இது போன்ற நல்ல கருத்துக்களை வழங்கவும்.. வரவேற்கிறோம்.

    ReplyDelete
  2. நன்றி சலீம்...

    வாசித்தலோடு நிறுத்தி விடாமல், முடிந்த வரை மூலிகைகளை உபயோகிக்க முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete