Saturday, October 22, 2011

35. தினம் ஒரு மூலிகை எழுத்தாணிப் பூண்டு

35. எழுத்தாணிப் பூண்டு
(தாவரவியல் பெயர் : Launaea sarmentosa )

பற்களுள்ள, முட்டை வடிவ, காம்புள்ள இலைகளையும் எழுத்தாணி போன்ற உருண்ட தண்டுகளில் நீல, மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய நேராக வளரும் செடி. வயல் வரப்புகளில் தானே வளர்வது.

இதற்கு முத்தெருக்கன் செவி என்றொரு பெயரும் உண்டு. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கும் குணமுடையது.

1. 5 முதல் 10 கிராம் இலைகளை நன்கு அரைத்துக் காலை மாலை கொடுத்து வரக் குடல் வெப்பு நீங்கிப் புண் ஆறும். சீத பேதி குணமாகும்.

2. இலைச் சாற்றுடன் சமஅளவு நல்லெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி சொறி, சிரங்குக்குப் பூச குணமாகும்.

3. 5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை குடித்துவர மார்பகம் வளர்ச்சி அடையும். கரப்பான், பரு, பிளவை ஆகியவை தீரும்.





34. தினம் ஒரு மூலிகை எலுமிச்சை

34. எலுமிச்சை
(தாவரவியல் பெயர் : Citrus Medica )

தாகங் குகைநோய் தாழா சிலிபதநோய்
வேகம் கொள் உன்மாதம் வீறுபித்தம் _மா கண்ணோய்
கன்னநோய் வாந்திபோம் கட்டுவாதித் தொழிலில்
மன்னெலுமிச்சங் கனியை வாழ்த்து,”


முள்ளுள்ள சிறு மரம். இலை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

உடல் சூடு தணிக்கவும், பசித் தூண்டியாகவும் பயன்படும்.

1. இலையை மோரில் ஊறவைத்து, மோரை உணவில் பயன்படுத்தப் பித்தச்சூடு, வெட்டிச் சூடு தணியும்.

2. பழச்சாறு நான்கு துளிகள் காதில் விட்டுவர காது வலி நீங்கும்.

3. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் அரை லிட்டர், நல்லெண்ணெய் ஒன்றரை லிட்டர் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

4. பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்துப் பின் காய வைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்தமயக்கம், குமட்டல், பித்தவாந்தி, சுவையின்மை, வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும்.

5. நகச் சுற்றுக்கு விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.


33. தினம் ஒரு மூலிகை எலிக்காதிலை



ஏறத்தாழ இதய வடிவ மெல்லிய இலைகளைக் கொண்ட தரையோடு நீண்டு வளரும் கொடி. இலையே மருத்துவப் பயனுடையது.

சிறுநீரைப் பெருக்கித் தாதுக் கொதிப்பைத் தணிக்கும் குணமுடையது.

1. ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் எலிக்காதிலையைக் குறுக்காக அரிந்து போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 150 மி.லி. யாகக் நாளைக்கு மூன்று வேளை, மூன்று நாட்களுக்கு சாப்பிட மேகச் சுரம், தாகம், நீரிழிவு, நீர்க் கடுப்பு, மூர்ச்சை, வலி ஆகியவை தீரும்.

2. உடம்பில் முள், ஊசி ஏதும் குத்தி வெளிப்படாமல் இருந்தால் அவ்விடத்தில் இலையை அரைத்துக் கட்ட வெளிப்படும்.

3. எலிக் காதிலையை அரைத்து வெட்டுக் காயத்தில் வைத்துக் கட்ட சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.



Sunday, October 9, 2011

32. தினம் ஒரு மூலிகை எருக்கு


எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும் வாயுவைத்
திருக்கறவே கொன்றுவிடும் தீர _ செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது.

அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய பெரிய நேராக வளரும் பாலுள்ள குறுஞ்செடிகள். செடி முழுதும் மென்மையான வெள்ளைக் கம்பளியால் மூடியது போலிருக்கும். விதைகள் பஞ்சுடன் இணைந்திருப்பதால் காற்றில் பறக்கக் கூடியவை. இலை, பட்டை, வேர், பூ, பால் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கு சிறந்தது.

இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்களல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளை உடையது.

1. இலையை அரைத்துப் புன்னைக் காயளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும்.

2. தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

3. இலைச்சாறு மூன்று துளி, 10 துளி த் தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

4. 200 மி.லி. உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய், தொழுநோய் ஆகியவை தீரும்.

5. வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும்.

குறிப்பு : எருக்கு மருந்து சிறுவர்களுக்கு ஆகாது. ஏதேனும் வேதனை இருப்பின் நல்லெண்ணெய் முறிப்பாகும்.




Wednesday, October 5, 2011

31. தினம் ஒரு மூலிகை ஊசித்தகரை

31. ஊசித்தகரை
( தாவரவியல் பெயர் : Cassia tora )

நீள்வட்ட இலைகளையும் மஞ்சள் நிறப்பூக்களையும் நீண்ட மெல்லிய காய்களையும் உடைய சிறு செடி. இலை வெகுட்டல் மணமுடையது. இதன் இலை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது.

உடல் வெப்பகற்றுதல், நுண்புழுக் கொல்லுதல், மலமிளக்குதல் ஆகியவை இதன் செய்கையாகும்.

1. 50 கிராம் இலையைக் குறுக அரிந்து ஒரு லிட்டர் நீரிலிட்டு 125 மி.லி. ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு 10 - 15 மி.லி. வீதம் காலை மாலை கொடுத்து வர குழந்தைகளுக்குப் பல் முளைக்கும்போது ஏற்படும் காய்ச்சல் தீரும்.

2. இலையை நீர்விட்டு மென்மையாக அரைத்துக் களிபோல அனலில் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப் போட கட்டி, பிடிப்பு, வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஊசித்தகரை வேரை எலுமிச்சம் பழச்சாற்றில் இழைத்துத் தடவ தேமல், படை ஆகியவை குணமாகும்.

4. இலைச் சாற்றுடன் சமளவு விளக்கெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி புண்களில் தடவி வரக் குணமாகும்.

5. விதையைப் புளித்த மோரில் அரைத்துத் தடவப் படை, சிரங்கு, ஆறாத புண் ஆகியவை தீரும்.

6. விதையை இலைக்கள்ளிச் சாற்றில் ஊறவைத்துக் கோநீரில் அரைத்துப் பூசிவர தொழுநோய்ப் புண், புரையோடிய புண்கள், படர்தாமரை, கட்டிகள் ஆகியவை குணமாகும்.


30. தினம் ஒரு மூலிகை உதிரமரம்


30. உதிரமரம்
( தாவரவியல் பெயர் : Lannea coromandelica )


சிறு கிளைகளில் நுனியில் கொத்தாக அமைந்த சிறகு கூட்டிலைகளையும் தடித்த பட்டையையும் உடைய இலையுதிர் மரம். இலையுதிர் காலங்களில் இலைகளே இல்லாமல் பூ அல்லது காய்கள் மட்டுமே நிறைந்து காணப்படும். ஒதியமரம என்றும் வழங்கப் பெறும். இலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

தாது பலம் கொடுக்கவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும், இரத்தக் கசிவை நிறுத்தவும், உடல் தாதுக்கள் அழுகுவதைத் தடுக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது.

1. இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களுக்கு கட்ட கரைந்து விடும்.

2. இலையை அரைத்துப் பற்றிட எவ்விதப் புண் புரைகளும் தீரும். ஒதியம் பட்டையை நீரிளிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரில் ஆறாத புண்கள், ஆசன வாயில் காணும் புண்கள், பிறப்புறுப்பில் உள்ள ரணங்கள் ஆகியவற்றைக் கழுவி வரக் குணமாகும். வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறுகளில் இரத்தம், சீழ் கசிதல் குணமாகும். 25 மி.லி. ஆகக் குடித்து வர அக உறுப்புகளில் உள்ள புண்கள், பெரும்பாடு, இரத்த மூலம் ஆகியவை குணமாகும்.

3. 20 கிராம் பட்டையுடன் 5 கிராம் மஞ்சள் சேர்த்து மையாக அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து வடிகட்டிக் காலை, மாலை சாப்பிட மூலக் கடுப்பு, இரத்த பேதி, நீர்த்த பேதி, தாகம், மயக்கம், பெரும்பாடு ஆகியவை தீரும்.

4. ஒதியம் பிசின் 100 கிராம் போடி செய்து அத்துடன் 5 கிராம் கிராம்புப் போடி கலந்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டிப் பொடியைத் தேனில் குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வர இரைப்பிருமல் தீரும்.








29. தினம் ஒரு மூலிகை (உசிலமரம்)

29. உசிலமரம்
( தாவரவியல் பெயர் : Albizia amara Roxb )

சமமான இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளையும், பூக்களின் கற்றையான மகரந்தத் தாள்களையும் தட்டையான காய்களையும் வட்டமான விதைகளையும் மிகவும் உறுதியான கட்டைகளையும் உடைய மரம். இலை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1. இலைப் பொடியை எண்ணெய்க் குளியலின் பொது சிகைக்காய்க்குப் பதிலாகப் பயன்படுத்த உடல் குளிர்ச்சி பெறும்.

2. உசிலைப் பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மி.லி. யாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 1,2 தேக்கரண்டி ஒரு நாளைக்கு மூன்று வேலையாகக் கொடுக்க குழந்தைகளுக்கு வரும் அள்ளு மாந்தம், சுழிக் கணை ஆகியவை குணமாகும்.







Tuesday, October 4, 2011

28. தினம் ஒரு மூலிகை ஈழத்தலரி


( தாவரவியல் பெயர் : Plumeria rubra )

நீண்ட தடித்த இலைகளையும் நறுமணமுள்ள மங்கலான நடுவில் மஞ்சள் நிறமுள்ள மலர்களையும் கொண்ட ஓர் இலையுதிர் மரம். இதன் எல்லாப் பாகமும் மருத்துவப் பயனுடையது.

1. பட்டையை மென்மையாக அரைத்துக் கடினமான கட்டிகளுக்குப் பற்றிட கட்டி உடைந்து ஆறும்.

2. மலர் அல்லது மொட்டுகளை வெற்றிலையுடன் மென்று தின்ன மண்டைப் பரு குணமாகும்.

3. வேர்ப் பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டிய குடிநீர் 50 மி.லி. காலையில் மட்டும் பருகிவரப் பாலியல் நோய்ப் புண்கள், சீழ்கலந்து வெளியேறும் சிறுநீர், சிறுநீர்ப் பாதை அழற்சி ஆகியவை குணமாகும்.

4. மரத்தின் பாலினை மூட்டு வலியுள்ள இடங்களில் தடவிவரக் குணப்படும்.




Monday, October 3, 2011

26. தினம் ஒரு மூலிகை ( இலுப்பை )


(தாவரவியல் பெயர் : Madhuca longifolia )

புண்ணும் புரையும் அறும் போதத் துவர்ப்பாகும்
எண்ணும் அகக்கடுப்பிருகமோ _ பெண்ணே கேள்
நீரிழிவு ஏகும் நெடுமோனம் மூலத்தால்
போரடர் கடுப்பு இரத்தம் போம்.

கிளை நுனியில் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்துக் கொத்தான வெள்ளை நிற மலர்களையும், முட்டை வடிவச் சத்தைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப் பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். இருப்பை என்றும் ஓமை என்றும் குறிப்பிடுவதுண்டு. இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசியுண்டாக்கும். சதை நரம்புகளை சுருங்கச் செய்யும். காமம் பெருக்கும். தும்மலுண்டாக்கும். விதை நோய் நீக்கி உடல் தேற்றும். பிண்ணாக்கு வாந்தியுண்டாக்கும்.

1. இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்.

2. இலுப்பைப் பூ 50 கிராம் எடுத்து அரைலிட்டர் நீரிலிட்டு 20 மி.லி.யாகக் காய்ச்சி வடிகட்டிக் காலை மட்டும் இரண்டு மாதங்கள் சாப்பிட மதுமேகம் குணமாகும்.

3. 10 கிராம் 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர தாது பெருகும். காய்ச்சல், தாகம் குறையும்.

4. பச்சைப் பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளிக்கச் சொறி சிரங்குகள் ஆறும்.

5. இலுப்பை எண்ணெயை இளஞ்சூடாக்கி தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

6. 10 கிராம் பிண்ணாக்கை நீர் விட்டரைத்து 50 மி.லி. நீரில் கலக்கி விஷம் சாப்பிட்டவர்களுக்குக் கொடுக்கக் கொடுக்க வாந்தியாகி நஞ்சுப் பொருள் வெளியாகும்.

7. பிண்ணாக்கு, வேப்பம்பட்டை, பூவரம் பட்டை எல்லாம் சம அளவு எடுத்துக் கருக்கி அந்த எடைக்குக் கார்போக அரிசியும் மஞ்சளும் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பிக் குழந்தைகளுக்கு வரும் மண்டைக் கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவற்றுக்குத் தடவ விரைவில் ஆறும்.

8. பிண்ணாக்கு அரைத்து அனலில் வைத்துக் களியாக்கி இளஞ்சூட்டில் விரை வீக்கத்திற்குக் கட்ட குணமாகும். 4,5 முறைகளில் தீரும்.






Sunday, October 2, 2011

25. தினம் ஒரு மூலிகை - இலந்தை

25. இலந்தை
(தாவரவியல் பெயர் : Ziziphus mauritiana lamk )

" பித்தம் மயக்கம் ருசி பேராப் பெரும் வாந்தி
மொத்த நிலம் எல்லாம் முடிந்திடுங்காண் மெத்த
உலர்ந்த வெறும் வயிற்றில் உண்டால் எரிவாம்
இலந்தை நறுங்கனியை எண்.

வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ இலைகளும் உடைய சிறுமரம். புளிப்புச் சுவையுடைய உண்ணக கூடிய பழங்களை உடையது. இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், வேர், பட்டை பசி தூண்டியாகவும், பழம் சளியகற்றி, மலமிளக்கி, பசித் தீயை அதிகப் படுத்தவும் பயன்படுகிறது.

1. இலை ஒரு பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 எல்லாம் சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் கோளாறுகள் நீங்கிக் குழந்தைப் பேறு கிட்டும்.

2. இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம்பட்டை 40 கிராம் எடுத்து நன்கு இடித்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து 125மி.லி.யாக்கி தினமும் நான்கு வேளை குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு தீரும்.

3. இலந்தை வேர்ப்பட்டைச் சூரணம் நான்கு சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.

4. துளிர் இலை அல்லது பட்டையை 5 கிராம் அளவு எடுத்து நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலை கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்த பேதி தீரும்.





Friday, September 30, 2011

27. தினம் ஒரு மூலிகை இலைக்கள்ளி

27. இலைக்கள்ளி
( தாவரவியல் பெயர் : Euphorbia nivulia Buch-Ham )

கனத்த சதைப் பற்றான நீண்ட இலகளையுடைய முள்ளுள்ள மரம். கள்ளி இனம். இதன் இலை, பால், வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

நீர்மலம் போக்குதல், கோழையகற்றுதல், தடிப்புண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது. வேர் நுண்புழுக் கொல்லும்.

1. இலைச் சாற்றை அல்லது பாலைப் பாலுண்ணிகளில் தடவி வர அவை உதிரும்.

2. இலையை வாட்டிச் சாறு பிழிந்து இளஞ்சூட்டில் காதில் விட காது வலி தீரும்.

3. இலைச்சாறு அல்லது பாலை வேப்பெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மேற்ப்பூச்சாகத் தேய்த்துவர மூட்டுப் பிடிப்பு, வாதக் குடைச்சல் மேக வாய்வு ஆகியவை குணமாகும்.

4. இலையை வாட்டிப் பிழிந்து 7, 8 துளிச் சாறெடுத்துத் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்குப் புகட்ட மலக்கட்டு நீங்கும்.

5. வாட்டிப் பிழிந்த சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டியை 30 மி. லி. நீரில் கலந்து மூன்று வேளையும் கொடுத்துவர ஈளை, இரைப்பிருமல் ஆகியவை தீரும்.

6. இலைச் சாற்றுடன் சிறிது உப்பிட்டுக் காய்ச்சி வைத்துக் கொண்டு 1/2 அல்லது 1 தேக்கரண்டி காலை மாலை கொடுத்துவரக் கக்குவான், சோகை, வயிற்றுப் புண், காமாலை, சூலை ஆகியவை தீரும்.

7. இலையை வதக்கி அடிவயிற்றில் கட்ட தேங்கிய சிறுநீர் வெளிப்படும்.

8. 10 கிராம் கடுகாய்த் தோலில் 80 கிராம் இலக்கள்ளிப் பாலைச் சேர்த்து நாற்பது நாட்கள் உலர்த்திப் பொடித்துக் கொண்டு 1/4 கிராம் வெந்நீரில் கலந்து உட்கொள்ள பேதியாகும். இதனால் ஈரல்கள் வீக்கம், பெருவயிறு, ஆறாத புண்கள், இரைப்பிருமல், கிரந்திப் புண்கள் ஆகியவை தீரும்.

9. இலைக்கள்ளி மரச் சக்கையை வதக்கி நகச் சுற்றுக்குக் கட்டிவர குணமாகும்.


Wednesday, September 28, 2011

24. தினம் ஒரு மூலிகை ( இத்தி )

இத்தி
( தாவரவியல் பெயர் : Ficus virens aiton )

ஆலிலை வடிவில் சிறிய இலைகளை உடைய மரம். சாறு பால் போன்று இருக்கும். இச்சி என்றும் அழைக்கப்படும். மரப்பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

மலமிளக்கல், தாதுப் பெருக்கம் ஆகியவை இதன் மருத்துவப் பயன்கள்.

1. 100 கிராம் இத்திக்காயை ஒன்றிரண்டாய் இடத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராக வற்றக் காய்ச்சிப் பிசைந்து வடிகட்டிக் காலையில் சாப்பிட மலம் தாராளமாகப் போகும்.

2. இத்திப் பிஞ்சு 25 கிராம் அதிகாலையில் மென்று தின்ன அதிசாரம், பேதி, கிராணி, உள்ளுறுப்புப் புண்கள் ஆறும்.

3. 100கிராம் இத்திப் பட்டையை ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை பாதிப் பாதியாகக் குடிக்க அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும்.

4. இத்திக்காயை நெய்விட்டு வதக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் தீரும்.





தினம் ஒரு மூலிகை ( இண்டு )


23. இண்டு
(தாவரவியல் பெயர் : Acacia pennata)

பீனிசத்தைப் போக்கும் பெருகியதோர் நீரேற்ற
தானசிக்கச் செய்யும் இது சத்தியங்காண்_ வானசைக்கும்
மண்டைக் குடைச்சல் மருவுமுக சன்னியும் போம்
பண்டையுற்ற இண்டினுக்குப் பார்.

சிறகமைப்புக் கூட்டிலைகளையும் வளைந்த கூரியமுட்கள் நிறைந்த வெண்மையான தண்டினையும் உடைய ஏறு கோடி. இலை, தண்டு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

கோழையகற்றுதல், நாடி நடையையும், உடல் வெப்பத்தையும் அதிகரித்தல் ஆகிய குணங்களை உடையது.

1. இண்டந்தண்டை சிறு துண்டாக நறுக்கி ஒரு புறம வாயினால் ஊத மறுபுறம் சாறு வரும். அந்த சாறு 15 மி.லி. யில் திப்பிளிப் பொடி, பொரித்த வெங்காரம் வகைக்கு ஒரு கிராம் சேர்த்துக் காலை மட்டும் 3 நாட்கள் கொடுத்தால் ஈளை, இருமல் குணமாகும்.

2. மேற்சொன்ன மருந்தை 1 தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சளி, மாந்தம் தீரும்.

3. இண்டங்கொடிச் சமூலம், தூதுவளை, கண்டங்கத்தரி வகைக்கு ஒரு பிடி திப்பிலி, பூண்டு வகைக்கு 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை 100 மி.லி. வீதம் கொடுத்து வர இரைப் பிருமல் தீரும். குழந்தைகளுக்கு 25 மி.லி. ஆகக் கொடுக்கலாம்.

4. இண்டம் வேர், தூதுவளை வேர் வகைக்கு 2 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை மாலை சாப்பிட இரைப்பிருமல் தீரும்.

5. இண்டம் இலை, சங்கிலி, தூதுவளை இலை, திப்பிலி, சுக்கு வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் இட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை, மாலை சாப்பிட இருமல் தீரும்.








Monday, September 26, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆகாயத் தாமரை )

22. ஆகாயத் தாமரை
( தாவரவியல் பெயர் : Pistia stratiotes )

நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. இலைகளே மருத்துவப் பயனுடையவை.

வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

1. இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப் புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட விரைவில் புண் ஆறும். ஆசன வாயில் வைத்துக் கட்டினால் வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.

2. 25 மி. லி. இலைச் சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாட்கள் தொடர்ந்து கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

3. இலைச்சாறு அரைலிட்டர், நல்லெண்ணெய் ஒரு லிட்டர் ஆகியவற்றைக் கலந்து இளம் தீயில் காய்ச்சி, மெழுகுப் பதத்தில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி ஆகியவற்றை வகைக்குப் பத்து கிராம் வீதம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும். (இத ஆகாயத் தாமரைத் தைலம் ஆகும்.)

4. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை பத்து நிமிடம் ஆசனவாயில் காட்ட மூல முளை விழும்.









Thursday, September 22, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆகாச கருடன் )


21. ஆகாச கருடன்

(தாவரவியல் பெயர் : Corallocarpus epigaeus)

அரையாப்பு வெள்ளையகலாக் கொறுக்கை
கரையாத கட்டி இவை காணார் வரையில்
திருடரெனச் செல்லும் விடம்சேர் பாம்பும் அஞ்சும்
கருடன் கிழங்கதனைக் கண்டு.

கோவையினத்தைச் சேர்ந்த பெருங்கிழங்கு உடைய ஏறு கொடி. கசப்புச் சுவையுள்ள கிழங்கே மிகவும் மருத்துவப் பயனுடையது. உடல் தேற்றவும், உடல் பலம் அதிகரிக்கவும் மருந்தாகும்.

1. சுண்டைக்காயளவு கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன தேள் கடி விஷமும், அதனால் ஏற்பட்ட நெரிகட்டுதலும் தீரும்.

2. கொட்டைப் பாக்களவு கிழங்கை மென்மையாக அரைத்து 50 மி.லி. தண்ணீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்ப்பூச்சாகவும் பூசி வர நாய், நரி, குரங்கு, பூனை முதலிய விலங்குகளின் கடி நஞ்சு தீரும்.

3. கிழங்கை தோல் நீக்கி உலர்த்திப் பொடித்து, ஒரு தேக்கரண்டிப் பொடியை சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு, உப்பு, புளி நீக்கி சாப்பிட பாம்பு நஞ்சு, கீல் பிடிப்பு, மேக நோய்கள் தீரும்.

4. 5 கிராம் கிழங்குப் பொடிய 100 மி.லி தண்ணீரில் கலந்து காய்ச்சிக் காலை மாலை சாப்பிட சீத பேதி தீரும்.

5. 100 கிராம் கிழங்குடன் 50 கிராம் 50 கிராம் வெங்காயம் 20 கிராம் சீரகம் சேர்த்தரைத்து விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கீழ வாதத்துக்கு பத்துப்போட குணமாகும்.

Saturday, September 17, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆனை நெருஞ்சில் )

20. ஆனை நெருஞ்சில்

(தாவரவியல் பெயர் : Pedalium murex)

நல்ல நெரிஞ்சிலது நாளும் கிரிச்சரத்தை

வல்ல சுரம் அனலை மாற்றும் காண் _மெல்லியலே

மாநிலத்தில் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டும்

கூனுறு மெய் வாதமும் போக்கும்.

சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலைகளையுடைய சிறு செடி. தனித்த மஞ்சள் நிறப்பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடையது. இலை, தண்டு, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சிறுநீர் பெருக்குதல், வெப்பு தணித்தல், குளிர்ச்சி தரல், உடல் உரமாக்கல், காமம் பெருக்கல், மாதவிலக்கு சிக்கலறுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிளிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறிவிடும். இதனை நாள்தோறும் காலையில் பருகிவர நீர்க்கடுப்பு, வெள்ளை, சொட்டு மூத்திரம், மலட்டுத்தன்மை ஆகியவை தீரும்.

2. 10 கிராம் இலைப் பொடியை பாலில் சர்க்கரை சேர்த்துப் பருகிவர வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி ஆகியவை தீரும்.

3. 50 கிராம் இலையை மென்மையாக அரைத்துத் தயிருடன் நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை, நீர் எரிச்சல், உடம்பெரிவு ஆகியவை குணமாகும்.

4. 20 கிராம் விதையை ஒன்றிரண்டாய் உடைத்து அரைலிட்டர் நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி வடிகட்டி காலை மாலையாகச் சாப்பிட நீர்சுருக்கு தீரும் விந்தணுக்கள் பெருகி ஆண் மலடு நீங்கும்.

5. இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.

தினம் ஒரு மூலிகை (ஆவாரை)

19. ஆவாரை

(தாவரவியல் பெயர் : Cassia auriculata)

பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி. மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டை தோல் பதனிடப் பயன்படுகிறது. இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்துப் பகுதிகளும் மருத்துவப் பயனுடையது.

சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல்படும்.

1. பூச்சூரணத்தையோ, பூவையோக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும பயன்படுத்த மேகவெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல், வறட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். தேகம் பொன்னிறமாகும்.

2. 20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை,மாலை குடித்துவர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.

3. ஆவாரம்பூ 100 கிராம் எடுத்து 3 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளராகக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட வெள்ளை, பெரும்பாடு, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும்.

4. ஆவாரம்பூவைவதக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து யோனியினைக் கழுவ கருப்பை புண், எரிச்சல் தீரும்.

5. ஆவாரம்பூ வேர்ப்பட்டை, சீந்தில் வேர், கொன்றைப் பூ சம அளவில் எடுத்து நீரிலிட்டு எட்டில் ஒன்றாய்க் காய்ச்சிக் குடிக்க நீரிழிவு தீரும்.

6. ஆவாரம்பூவை நன்றாக அரைத்து அதன் சாற்றை கண்ணில் விட சீழ் பிடிக்கும் கண்நோய் தீரும்.

7. ஆவாரம்பூ, இலை சமஅளவு எடுத்து நன்றாக சுத்தம் செய்து விளக்கெண்ணெயில் வதக்கி சூட்டுடன் வீக்கம், கட்டி இவற்றில் வைத்துக் கட்ட கட்டி கரையும்.

தினம் ஒரு மூலிகை ( ஆல்)

18. ஆல்


(தாவரவியல் பெயர் : Ficus benghalensis)

சொல்லுகின்ற மேகத்தை துஷ்ட அகக்கடம்பை

கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்காண் நல்வின்

பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்

மேலும் இலையுமென விள்.

மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையது.

விழுது, பட்டை, இலை ஆகியவை, உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.

1. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது ஆகியவை வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் இடித்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலை தினமும் குடிக்க மேக எரிச்சல், மேகப்புண், வெள்ளை படுதல் தீரும்.

2. ஆலம் பாலை வாய்ப்புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் இவைகளுக்குத் தடவ குணமாகும்.

3. ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்தணுக்கள் உற்பத்தியாகும்.

4. துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து சாப்பிட இரத்த பேதி நிற்கும்.

5. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் இடித்து 4 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி காலையில் மட்டும், ஒரு குவளை 4 நாட்களுக்கு ஒரு முறை 4 மண்டலம் வரை சாப்பிட (ஒரு மண்டலம் 48 நாட்கள்) மதுமேகம் (சர்க்கரை நோய்) தீரும்.