Saturday, September 17, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆல்)

18. ஆல்


(தாவரவியல் பெயர் : Ficus benghalensis)

சொல்லுகின்ற மேகத்தை துஷ்ட அகக்கடம்பை

கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்காண் நல்வின்

பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்

மேலும் இலையுமென விள்.

மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையது.

விழுது, பட்டை, இலை ஆகியவை, உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.

1. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது ஆகியவை வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் இடித்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலை தினமும் குடிக்க மேக எரிச்சல், மேகப்புண், வெள்ளை படுதல் தீரும்.

2. ஆலம் பாலை வாய்ப்புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் இவைகளுக்குத் தடவ குணமாகும்.

3. ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்தணுக்கள் உற்பத்தியாகும்.

4. துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து சாப்பிட இரத்த பேதி நிற்கும்.

5. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் இடித்து 4 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி காலையில் மட்டும், ஒரு குவளை 4 நாட்களுக்கு ஒரு முறை 4 மண்டலம் வரை சாப்பிட (ஒரு மண்டலம் 48 நாட்கள்) மதுமேகம் (சர்க்கரை நோய்) தீரும்.

தினம் ஒரு மூலிகை ( ஆமணக்கு)

17. ஆமணக்கு

(தாவரவியல் பெயர் : Ricinus communis)

கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண்பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டை முத்து எனப்படும். இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் (விளக்கெண்ணெய்) மலமிளக்கும். தாது வெப்பகற்றும்.

1. இலையை நெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும்.

2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டிவர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.

4. ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் அளவு காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.

5. 30 மி.லி விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.

6. கண் வலியின் போதும், கண்ணில் தூசி விழுந்த போதும் ஓரிரு துளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.

7. தோல் நீக்கிய விதையை மெழுகுபோல் அரைத்துப் பற்றுப் போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும், மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.

8. வேரை அரைத்துப் பற்றுப் போட பல்வலி நீங்கும்.

தினம் ஒரு மூலிகை (ஆடுதின்னாப் பாளை)


16. ஆடுதின்னாப் பாளை

(தாவரவியல் பெயர் : Aristolochia bracteolata)

"ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி

நீடுகருங் குட்டம் நிறைகரப்பான்ஆடிடச் செய்

எண்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்

திண்பெருநற் றாதுவுமாஞ் செப்பு"

மாற்றடுக்கில் அமைந்த வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களையுடையது. எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.

வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறுகால வலியை அதிகமாக்கும் மருந்தாகவும் பயன்படும்.

1. 10 மி.லி. இலைச்சாறு காலை மாலை குடித்து வர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணமாகும்.

2. இலைச்சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் கொள்ளப் பாம்பு விஷம், சில் விஷம், மலக்கிருமிகள், கருங்குட்டம், யானைத் தோல் சொறி தீரும்.

3. வேரை அரைத்துக் காலை, மாலை 5 கிராம் கொடுத்துக் கடும் பத்தியம் இருக்க (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல், 24 மணிநேரம் தூங்க விடக்கூடாது) மூன்று நாட்களில் எல்லாவிதப் பாம்பு நஞ்சும் தீரும்.

4. வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை நீங்கி சுகப்பேறு ஆகும்.

5. விதைச் சூரணம் 5 கிராம் விளக்கெண்ணெயில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்றுவலி, சூதகத்தடை, மலக்கிருமிகள் நீங்கும்.

ஆடு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.

இனிப்பு -நல்ல பாம்பு, இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு, தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு, உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு,கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு, காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு, புளிப்பு -வழலைப் பாம்பு, புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு, முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு, நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு, நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு, கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு, பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.

Wednesday, September 14, 2011

தினம் ஒரு மூலிகை ( ஆடாதொடை )

15. ஆடாதொடை

(தாவரவியல் பெயர் : Adhatoda vasica )


ஆடாதோ டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற்

கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்-நாடின

மிகுத்தெழுந்த சந்நிபதின் மூன்றும் விலக்கும்

அகத்துநோய் போக்கு மறி

நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயல் படும்.

1. இலைச்சாறும் தேனும் சம அளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.

2. இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.

3. 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன் கலந்து காலை, மாலை 40 நாட்கள் பருகி வர என்புருக்கிக் காசம் (T.B.) இரத்த காசம், சளிச்சுரம், சீதளவலி, விலாவலி ஆகியவை தீரும்.

4. ஆடாதொடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமஅளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணமாகும்.

5. ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிக் காலை, மாலை பருகி வரக குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி தீரும்.

6. உலர்ந்த ஆடாதொடை இலைத்தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே நிற்கும்.

7. 700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம், இலவங்கம் 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைத் தூள் செய்து போட்டுப் போன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி (ஆடாதொடை மணப்பாகு ) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும். ஒரு நாளைக்கு 3 வேளையாகநீண்ட நாட்கள் கொடுத்து வர காசம், என்புருக்கி, மார்ச்சளி, கப இருமல். நீடித்த ஆஸ்துமா, நிமோனியா ஆகியவை குணமாகும். குரல் இனிமை பெறும்.

8 ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. அளவாகப் பருகி வர எவ்விதச் சுரமும் நீங்கும். இது அஷ்ட மூலக் கஷாயம் எனப்படும்.

9. வேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை, மாலை கொடுத்து வரச் சுகப்பிரசவம் ஆகும்.