Tuesday, January 3, 2012

4. சோம்பு

4. சோம்பு

(தாவரவியல் பெயர் : Pimpinella Anisum)

இதனை பெருஞ்சீரகம்னும் சொல்வாங்க. சோம்பு செரிமான சக்திய அதிகப்படுத்தும்.

1. சோம்பை இளவறுப்பா வறுத்து பொடித்து 2 கிராம் எடையளவு சர்க்கரை கலந்து, தினம் இருவேளை சாப்பிட வயிற்றுவலி, வயிற்று உப்புசம், செரியாமை, இருமல், இரைப்பு நோய் ஆகியவை குறையும்.

2. சோம்புக் கஷாயம் 15 முதல் 20 மி.லி அளவு குழந்தைகளுக்குக் கொடுக்க கழிச்சல், வயிற்றுப் பொருமல் நீங்கும்.

3. சோம்பு, சீரகம், மிளகு சம அளவு சேர்த்து பொடி செய்து பொடியை தேனுடன் சாப்பிட குரல் கம்மல், இரைப்பு, மூக்கில் நீர் பாய்தல் போன்றவை நீங்கும்.

4. சோம்பு பசியைத் தூண்டும்.

5. சோம்பு, மல்லி இரண்டையும் இள வறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக பொடித்து நாலு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி, இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் கலந்து குடிக்க கர்ப்பிணிப் பெண்களின் சூட்டு வலி தீரும்.

3. வெந்தயம்...

3. வெந்தயம்

(தாவரவியல் பெயர் : Trigonella foenum graecum)

பிள்ளைக் கணக்காய்ச்சல் பேதி சீதக்கழிச்சல்
தொல்லை செய்யும் மேகம் தொலையும் காண் _ உள்ளபடி
வெச்சென்ற மேனி மிகவும் குளிர்ச்சியதாம்
அச்சம் இலை வெந்தயத்திற்காய்.

இது கீரை வகையைச் சேர்ந்தது. இலைகளும் விதைகளும் மருத்துவப் பயனுள்ளது. வெந்தயத்த காரக்குழம்பு, ஊறுகாய்க்கு அவசியம் பயன் படுத்துவாங்க. கீரையக் கூட்டா செஞ்சு சாப்பிட்டா உடலுக்கு நல்ல குளிர்ச்சியத் தரும்.

1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.

2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.

3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.

4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.

6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.

7. வெந்தயம், கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.

8. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி, பொருமல், ஈரல வீக்கம் குறையும்.

9. வெந்தயம், வாதுமைப் பருப்பு, கசகசா, உடைத்த கோதுமை, நெய், பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும், வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.

10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.

11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.

2. சீரகம்


( தாவரவியல் பெயர் : Cuminum cyminum )

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே


இதுவும் நாம தினமும் சமையலுக்குப் பயன்படுத்தற ஒரு கடைச்சரக்குதான். சீரகம் நம்ம வயித்துல இருக்குற வாயுவ நீக்கி, செரிமானத்த அதிகப்படுத்தி, சிறுநீர்பெருக்கி, திசுக்களை இறுகச் செய்யறது, மாதவிலக்கத் தூண்டுறது போன்ற மருத்துவக் குணங்களை உடையது.

1. சீரகத்த நல்லா காயவச்சு பவுடராக்கி 1 கிராம் அளவு எடுத்துத் தேன் அல்லது பாலில் காலை, மாலை சாப்பிட பித்தம், வாயு, உதிரச்சிக்கல், சீதக்கழிச்சல், ஆகியவை தீரும்.

2. சீரகத்த சுத்தம் செஞ்சு 50 கிராம் எடுத்து காயவச்சுப் பொடி செஞ்சு நாட்டுச் சக்கர கலந்து, விடாம தொடர்ந்து நாள்தோறும் சாப்பிட தேகம் வன்மை பெறும்.

3. பொடித்த சீரகம் ஒரு ஸ்பூன் கற்கண்டு தூள் சேர்த்து சாப்பிட்டா இருமல் தீரும்.

4. சீரகத்த கரிசாலைச் சாறில் ஊறப் போட்டு உலர்த்தின பொடி 5 கிராம், சர்க்கரை 10 கிராம், சுக்குப்பொடி 5 கிராம் இந்த மூன்று பொடிகளையும் கலந்து தினமிருவேளை உட்கொள்ள காமாலை, வாயு, உட்சுரம் தீரும்.

5. தேவையான அளவு சுத்தம் செஞ்ச சீரகத்த எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு, நெல்லிச்சாறு ஆகியவை ஒவ்வொண்ணுலையும் மும்மூணு முறை ஊறவச்சு உலர்த்திப் பொடி செஞ்சு அரைத்தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வர செரியாமை, சுவையின்மை, பித்தமயக்கம், கண்ணெரிச்சல், வயிற்றுவலி, மூலக்கொதிப்பு, உடல் வெப்பம் ஆகியவை தீரும்.

6. சீரகத்த அரச்சுப் பத்துபோட்டா மார்பக வீக்கம், விரைவீக்கம் ஆகியவை குறையும். எரிச்சல், வலியுள்ள இடங்கள்ல தடவ குணமாகும்.



Monday, January 2, 2012

1. கடுகு


1. கடுகு
( தாவரவியல் பெயர் : Brassoca juncea )

இடிகாச நாசிக்கு ரீளைகபம் பித்தங்
கடிவாத சீதங் கடுப்போ-குடலிற்
படுகோட்டு நோயென்னும் பங்கிவைக ளைப்புண்
கடுகோட்டு மேன்மருந்த காண்.
மந்தமயக் கம்வாதம் வாய்நீர்ச் சுழற்றலறு
முந்து சுகப்பிரச வங்களுண்டா-மிந்துதன்
மானே கிராணிகுன்ம மாறுமுத் தோடமும்போம்
தானே கடுகிற்குத் தான்

கடுகுன்னு சொன்னதுமே மொதல்ல நமக்கு நெனப்பு வர்றது தாளிப்பு தான். ஒரு சமையல் முழுமையடையறது தாளிப்புலதான் இருக்கு. இந்த கடுகுல ரெண்டு வகை இருக்கு. கருங்கடுகு இத செங்கடுகுன்னும் சொல்லுவாங்க. இன்னொண்ணு வெண்கடுகு. இது நாட்டு மருந்துக் கடைல கிடைக்கும்.

வாந்தி உண்டாக்கறது, வெப்பத்த அதிகப்படுத்தறது, சிறுநீர் பெருக்குதல், நாம சாப்பிடற உணவுப்பொருட்கள வேகமா செரிக்க வைக்கறது போன்ற மருத்துவ குணங்கள் கடுகுக்கு இருக்கு.

1. பூச்சிமருந்து குடிச்சவுங்க, தூக்க மாத்திரை சாப்பிட்டவுங்களுக்கு 2 கிராம் கடுகை நைசா அரைச்சு தண்ணில கலக்கி குடிக்க கொடுத்தா உடனடியா வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.

2. கடுகோட சமஅளவு முருங்கப்பட்டை சேர்த்து அரைச்சு பத்துப்போட கைகால் குடைச்சல், மூட்டு வலி, நரம்புப் பிடிப்பு இதெல்லாம் தீரும். எரிச்சல் இருந்தா உடனே கழுவிரணும்.

3. 10 கிராம் கடுகைப் பவுடராக்கி கால் லிட்டர் தண்ணில ஊறவச்சு வடிகட்டிக் குடிச்சா விக்கல் உடனே நிக்கும்.

4. கடுகு எண்ணெயோட 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து கொஞ்சம் கற்பூரம் சேர்த்து மூட்டு வலி, மார்புவலிக்குத் தேய்க்க வலி குறையும்.

5. கடுகைப் பொடிச்சு அரிசி மாவுல கலந்து பிசைஞ்சு களிபோல வேகவச்சு துணில தடவி வலியுள்ள இடங்கள்ல போட வயித்துவலி, வாதவலி, கெண்ட வலி எல்லா வலியும் தீரும்.



Wednesday, November 23, 2011

40. தினம் ஒரு மூலிகை ஓரிதழ் தாமரை.

( தாவரவியல் பெயர் : Hybanthus enneaspermus )

ஓரிதழ்த் தாமரையின் உற்ற குணத்தைக் கேளாய்

மார்பில் இல்லாத மங்கையர்க்கு மோரில்

குடிக்கப்பால் உண்டாகும் கோர மேகத்தை

படிக்குள் இருக்கா தொழிக்கும் பார்.

மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிவப்பு நிறமுள்ள ஒரே இதழுடைய மலர்களையும் உடைய குறுஞ்செடி. செடியின் எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.

தாது வெப்பகற்றியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

1. இலையை நாள்தோறும் விடிவதற்கு முன் சிறிதளவு மென்று தின்று, பால் அருந்திவர ஒரு மண்டலத்தில் (48 நாட்களில்) தாது இழப்பு, அதிமூத்திரம்,வெள்ளை, வெட்டைச்சூடு, நீர் எரிச்சல், சிற்றின்பப் பலவீனம் ஆகியவை தீரும்.

2. ஓரிதழ் தாமரை இலை, கீழா நெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை மூன்றையும் ஒரு பிடி அளவு அரைத்து 200 மி.லி. எருமைத் தயிரில் 10 நாட்கள் சாப்பிட நீர்த்தாரை ரணம், வெள்ளை ஆகியவை தீரும். ( மருந்து சாப்பிட்ட பின் காரமும், சூடும் இல்லாத உணவு சாப்பிட வேண்டும்.)


39. தினம் ஒரு மூலிகை ஓமவல்லி.

(தாவரவியல் பெயர் : Coleus aromaticus Benth)

"காச இருமல் கதித்தம சூரியயையம்

பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் - வீசுசுரங்

கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்

கற்பூர வள்ளிதனைக் கண்டு."

சதைப் பற்றுள்ள, மணமுள்ள எதிரடுக்கில் அமைந்த இலகளையுடைய குறுஞ்செடியினம். இலையே மருத்துவப் பயனுடையது.

வியர்வைப் பெருக்கியாகவும், கோழை அகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் செயல்படும்.

1. இலைச்சாற்றைச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கச் சீதள இருமல் தீரும்.

2. இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.

3. இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும்.



38. தினம் ஒரு மூலிகை ஓமம்...


(தாவரவியல் பெயர் : Carum copticum Benth & Hooke)

சீதசுரம் காஞ்செரியா மந்தம் பொருமல்
பேதி இரைச்சல் கடுப்பு பேர் மம் ஓதிருமல்
பல்லோடு பல்மூலம் பகம் இவை நோயென் செயு மோர்
சொல்லோடு போம் ஓமெனச்சொல்.

நேராக வளரும் விதைகளுக்காகப் பயிரிடப் படும் சிறு செடியினம். விதைகளே மருத்துவப் பயனுடையவை. பசித் தூண்டுதல், வயிற்று வாயுவகற்றல், இசிவகற்றல், அழுகலகற்றல், உடல் வெப்பமிகுத்தல், உமிழ்நீர் பெருக்கல், உடலுரமாக்கல் ஆகிய மருத்துவப் பண்புகளையுடையது.

1. தூய்மையான ஓமத்தை வறுத்துப் பொடித்து ஒரு கிராம் அளவுக்கு நீருடன் கொள்ளப் பசியைத் தூண்டும். வயிற்று வாயு தீரும்.

2. ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களிபோலக் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப் போடக் குணமாகும்.

3. ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் ஆகியவற்றைச் சமஅளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து இடித்துப் பொடித்து, அத்துடன் சமஅளவு சர்க்கரைப் பொடி சேர்த்து, அரைத்த தேக்கரண்டியாகக் காலை, மாலை கொடுத்துவரச் செரியாமை, கடும் வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும்.

4. ஓமம், திப்பிலி, ஆடாதோடையிலை, கசகசாத் தொல் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி வடித்து 15 மி.லி.யாகக் காலை, மாலை கொடுத்து வர இரைப்பிருமலில் நெஞ்சுச் சளி கரையும்.

Friday, November 4, 2011

37. தினம் ஒரு மூலிகை (ஏலம்)

( தாவரவியல் பெயர் : Elettaria cardamomum Maton )

தொண்டை வாய் கவுள் தாலு குதங்களில்
தோன்றும் நோய் அதிசாரம் பன் மேகத்தால்
உண்டைபோல் எழும் கட்டி கிரிச்சரம்
உழலை வாந்தி சிலந்தி விஷசுரம்
பண்டை வெக்கை விதாக நோய் காசமும்
பாழும் சோமப்பிணி விந்து நட்டம் உள்
அண்டை ஈளை வன்பித்தம் இவைகலாம்
லமாம் கமழ் ஏலமருந்தே.


மலைப்பாங்கான இடங்களில் விளையும் ஒரு மணப் பொருள். உலர்ந்த காய்கள் நாட்டு மருந்துக் கடைகளிலும், பலசரக்குக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். பசித்தூண்டியாகவும், வயிற்று வாயுவகற்றியாகவும் உடல் வெப்பம் மிகுப்பானகவும் செயல்படும்.

1. ஐந்து ஏலக்காயை நசுக்கி 200 மி.லி. பாலில் போட்டு, 200மி.லி. தண்ணீர் சேர்த்து சுண்டக் காய்ச்சிச் சர்க்கரை கலந்து வடிகட்டிக் காலை, மாலை சாப்பிடப் பித்த மயக்கம் தீரும்.

2. ஏலரிசி, சீரகம், சுக்கு, கிராம்பு சமஅளவு எடுத்துப் பொடியாக்கி இரண்டு கிராம் வீதம் தேனில், ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை ஆகியவை குணமாகும்.

3. ஏலக்காயை உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு மூன்று வேளை சாப்பிட்டு வர தொண்டை, வாய், கீழ்வாய், இவைகளில் உண்டாகும் நோய்களையும் இருமல், கழிச்சல், நீர்ச்சுருக்கு, நெஞ்சின் கோழைக் கட்டு, சிலந்தி நஞ்சு இவற்றைப் போக்கும். பித்தத்தை ஆற்றும். பசித்தீயை உண்டாக்கும். விந்துவைப் பெருக்கும்.





Thursday, November 3, 2011

36. தினம் ஒரு மூலிகை. எள்


36. எள்
( தாவரவியல் பெயர் : Sesamum orientale )

மெல்லியதாக உடைந்த இலைகளையும், வெண்மையான தனித்த மலர்களையும், நான்கு பட்டையான காய்களையும், பழுப்பு நிற அல்லது சிறிய எண்ணெய்ச் சத்துள்ள விதைகளையும் உடைய சிறு செடியினம்.

இலைகள் எரிச்சல் தணிக்கும். விதை சிறு நீர் பெருக்கும். மாதவிலக்குத் தூண்டும், மலமிளக்கும், தாய்ப்பால் அதிகரிக்கும், உடலுரமாக்கும்.

1. இலையை அரைத்துக் கட்டிகளுக்குப் பற்றிட விரைவில் ஆறும்.

2. இலைக் கொத்தை நீரிலிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாகத் தடித்து காணப்படும். இதனைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு ஆகியவை தீரும். பெரியவர்களுக்கு நீர்க்கோவை, சிறுநீர்ப்பை அழற்சி, சொட்டு நீர் ( சொட்டு சொட்டாக சிறுநீர் போதல் ) ஆகியவை தீரும்.

3. 5 கிராம் எள் பொடியை வெண்ணையுடன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.

4. எள்ளை அரைத்துக் களிபோலக் கிளறி இளஞ்சூட்டில் கட்டிகளின் மீது பூசி வர பழுத்து உடையும்.

5. ஒரு கிராம் எள் பொடியை நாள்தோறும் மூன்று அல்லது நான்கு வேளை சாப்பிட்டு வர மாதவிலக்குப் பிரச்சினைகள் நீங்கும்.


Saturday, October 22, 2011

35. தினம் ஒரு மூலிகை எழுத்தாணிப் பூண்டு

35. எழுத்தாணிப் பூண்டு
(தாவரவியல் பெயர் : Launaea sarmentosa )

பற்களுள்ள, முட்டை வடிவ, காம்புள்ள இலைகளையும் எழுத்தாணி போன்ற உருண்ட தண்டுகளில் நீல, மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய நேராக வளரும் செடி. வயல் வரப்புகளில் தானே வளர்வது.

இதற்கு முத்தெருக்கன் செவி என்றொரு பெயரும் உண்டு. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. மலமிளக்கும் குணமுடையது.

1. 5 முதல் 10 கிராம் இலைகளை நன்கு அரைத்துக் காலை மாலை கொடுத்து வரக் குடல் வெப்பு நீங்கிப் புண் ஆறும். சீத பேதி குணமாகும்.

2. இலைச் சாற்றுடன் சமஅளவு நல்லெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி சொறி, சிரங்குக்குப் பூச குணமாகும்.

3. 5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை குடித்துவர மார்பகம் வளர்ச்சி அடையும். கரப்பான், பரு, பிளவை ஆகியவை தீரும்.





34. தினம் ஒரு மூலிகை எலுமிச்சை

34. எலுமிச்சை
(தாவரவியல் பெயர் : Citrus Medica )

தாகங் குகைநோய் தாழா சிலிபதநோய்
வேகம் கொள் உன்மாதம் வீறுபித்தம் _மா கண்ணோய்
கன்னநோய் வாந்திபோம் கட்டுவாதித் தொழிலில்
மன்னெலுமிச்சங் கனியை வாழ்த்து,”


முள்ளுள்ள சிறு மரம். இலை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

உடல் சூடு தணிக்கவும், பசித் தூண்டியாகவும் பயன்படும்.

1. இலையை மோரில் ஊறவைத்து, மோரை உணவில் பயன்படுத்தப் பித்தச்சூடு, வெட்டிச் சூடு தணியும்.

2. பழச்சாறு நான்கு துளிகள் காதில் விட்டுவர காது வலி நீங்கும்.

3. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் அரை லிட்டர், நல்லெண்ணெய் ஒன்றரை லிட்டர் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

4. பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்துப் பின் காய வைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்தமயக்கம், குமட்டல், பித்தவாந்தி, சுவையின்மை, வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும்.

5. நகச் சுற்றுக்கு விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.


33. தினம் ஒரு மூலிகை எலிக்காதிலை



ஏறத்தாழ இதய வடிவ மெல்லிய இலைகளைக் கொண்ட தரையோடு நீண்டு வளரும் கொடி. இலையே மருத்துவப் பயனுடையது.

சிறுநீரைப் பெருக்கித் தாதுக் கொதிப்பைத் தணிக்கும் குணமுடையது.

1. ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் எலிக்காதிலையைக் குறுக்காக அரிந்து போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 150 மி.லி. யாகக் நாளைக்கு மூன்று வேளை, மூன்று நாட்களுக்கு சாப்பிட மேகச் சுரம், தாகம், நீரிழிவு, நீர்க் கடுப்பு, மூர்ச்சை, வலி ஆகியவை தீரும்.

2. உடம்பில் முள், ஊசி ஏதும் குத்தி வெளிப்படாமல் இருந்தால் அவ்விடத்தில் இலையை அரைத்துக் கட்ட வெளிப்படும்.

3. எலிக் காதிலையை அரைத்து வெட்டுக் காயத்தில் வைத்துக் கட்ட சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.



Sunday, October 9, 2011

32. தினம் ஒரு மூலிகை எருக்கு


எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும் வாயுவைத்
திருக்கறவே கொன்றுவிடும் தீர _ செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது.

அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய பெரிய நேராக வளரும் பாலுள்ள குறுஞ்செடிகள். செடி முழுதும் மென்மையான வெள்ளைக் கம்பளியால் மூடியது போலிருக்கும். விதைகள் பஞ்சுடன் இணைந்திருப்பதால் காற்றில் பறக்கக் கூடியவை. இலை, பட்டை, வேர், பூ, பால் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கு சிறந்தது.

இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்களல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளை உடையது.

1. இலையை அரைத்துப் புன்னைக் காயளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும்.

2. தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

3. இலைச்சாறு மூன்று துளி, 10 துளி த் தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

4. 200 மி.லி. உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய், தொழுநோய் ஆகியவை தீரும்.

5. வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும்.

குறிப்பு : எருக்கு மருந்து சிறுவர்களுக்கு ஆகாது. ஏதேனும் வேதனை இருப்பின் நல்லெண்ணெய் முறிப்பாகும்.




Wednesday, October 5, 2011

31. தினம் ஒரு மூலிகை ஊசித்தகரை

31. ஊசித்தகரை
( தாவரவியல் பெயர் : Cassia tora )

நீள்வட்ட இலைகளையும் மஞ்சள் நிறப்பூக்களையும் நீண்ட மெல்லிய காய்களையும் உடைய சிறு செடி. இலை வெகுட்டல் மணமுடையது. இதன் இலை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது.

உடல் வெப்பகற்றுதல், நுண்புழுக் கொல்லுதல், மலமிளக்குதல் ஆகியவை இதன் செய்கையாகும்.

1. 50 கிராம் இலையைக் குறுக அரிந்து ஒரு லிட்டர் நீரிலிட்டு 125 மி.லி. ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு 10 - 15 மி.லி. வீதம் காலை மாலை கொடுத்து வர குழந்தைகளுக்குப் பல் முளைக்கும்போது ஏற்படும் காய்ச்சல் தீரும்.

2. இலையை நீர்விட்டு மென்மையாக அரைத்துக் களிபோல அனலில் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப் போட கட்டி, பிடிப்பு, வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஊசித்தகரை வேரை எலுமிச்சம் பழச்சாற்றில் இழைத்துத் தடவ தேமல், படை ஆகியவை குணமாகும்.

4. இலைச் சாற்றுடன் சமளவு விளக்கெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி புண்களில் தடவி வரக் குணமாகும்.

5. விதையைப் புளித்த மோரில் அரைத்துத் தடவப் படை, சிரங்கு, ஆறாத புண் ஆகியவை தீரும்.

6. விதையை இலைக்கள்ளிச் சாற்றில் ஊறவைத்துக் கோநீரில் அரைத்துப் பூசிவர தொழுநோய்ப் புண், புரையோடிய புண்கள், படர்தாமரை, கட்டிகள் ஆகியவை குணமாகும்.


30. தினம் ஒரு மூலிகை உதிரமரம்


30. உதிரமரம்
( தாவரவியல் பெயர் : Lannea coromandelica )


சிறு கிளைகளில் நுனியில் கொத்தாக அமைந்த சிறகு கூட்டிலைகளையும் தடித்த பட்டையையும் உடைய இலையுதிர் மரம். இலையுதிர் காலங்களில் இலைகளே இல்லாமல் பூ அல்லது காய்கள் மட்டுமே நிறைந்து காணப்படும். ஒதியமரம என்றும் வழங்கப் பெறும். இலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

தாது பலம் கொடுக்கவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும், இரத்தக் கசிவை நிறுத்தவும், உடல் தாதுக்கள் அழுகுவதைத் தடுக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது.

1. இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களுக்கு கட்ட கரைந்து விடும்.

2. இலையை அரைத்துப் பற்றிட எவ்விதப் புண் புரைகளும் தீரும். ஒதியம் பட்டையை நீரிளிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரில் ஆறாத புண்கள், ஆசன வாயில் காணும் புண்கள், பிறப்புறுப்பில் உள்ள ரணங்கள் ஆகியவற்றைக் கழுவி வரக் குணமாகும். வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறுகளில் இரத்தம், சீழ் கசிதல் குணமாகும். 25 மி.லி. ஆகக் குடித்து வர அக உறுப்புகளில் உள்ள புண்கள், பெரும்பாடு, இரத்த மூலம் ஆகியவை குணமாகும்.

3. 20 கிராம் பட்டையுடன் 5 கிராம் மஞ்சள் சேர்த்து மையாக அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து வடிகட்டிக் காலை, மாலை சாப்பிட மூலக் கடுப்பு, இரத்த பேதி, நீர்த்த பேதி, தாகம், மயக்கம், பெரும்பாடு ஆகியவை தீரும்.

4. ஒதியம் பிசின் 100 கிராம் போடி செய்து அத்துடன் 5 கிராம் கிராம்புப் போடி கலந்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டிப் பொடியைத் தேனில் குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வர இரைப்பிருமல் தீரும்.








29. தினம் ஒரு மூலிகை (உசிலமரம்)

29. உசிலமரம்
( தாவரவியல் பெயர் : Albizia amara Roxb )

சமமான இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளையும், பூக்களின் கற்றையான மகரந்தத் தாள்களையும் தட்டையான காய்களையும் வட்டமான விதைகளையும் மிகவும் உறுதியான கட்டைகளையும் உடைய மரம். இலை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1. இலைப் பொடியை எண்ணெய்க் குளியலின் பொது சிகைக்காய்க்குப் பதிலாகப் பயன்படுத்த உடல் குளிர்ச்சி பெறும்.

2. உசிலைப் பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மி.லி. யாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 1,2 தேக்கரண்டி ஒரு நாளைக்கு மூன்று வேலையாகக் கொடுக்க குழந்தைகளுக்கு வரும் அள்ளு மாந்தம், சுழிக் கணை ஆகியவை குணமாகும்.







Tuesday, October 4, 2011

28. தினம் ஒரு மூலிகை ஈழத்தலரி


( தாவரவியல் பெயர் : Plumeria rubra )

நீண்ட தடித்த இலைகளையும் நறுமணமுள்ள மங்கலான நடுவில் மஞ்சள் நிறமுள்ள மலர்களையும் கொண்ட ஓர் இலையுதிர் மரம். இதன் எல்லாப் பாகமும் மருத்துவப் பயனுடையது.

1. பட்டையை மென்மையாக அரைத்துக் கடினமான கட்டிகளுக்குப் பற்றிட கட்டி உடைந்து ஆறும்.

2. மலர் அல்லது மொட்டுகளை வெற்றிலையுடன் மென்று தின்ன மண்டைப் பரு குணமாகும்.

3. வேர்ப் பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டிய குடிநீர் 50 மி.லி. காலையில் மட்டும் பருகிவரப் பாலியல் நோய்ப் புண்கள், சீழ்கலந்து வெளியேறும் சிறுநீர், சிறுநீர்ப் பாதை அழற்சி ஆகியவை குணமாகும்.

4. மரத்தின் பாலினை மூட்டு வலியுள்ள இடங்களில் தடவிவரக் குணப்படும்.




Monday, October 3, 2011

26. தினம் ஒரு மூலிகை ( இலுப்பை )


(தாவரவியல் பெயர் : Madhuca longifolia )

புண்ணும் புரையும் அறும் போதத் துவர்ப்பாகும்
எண்ணும் அகக்கடுப்பிருகமோ _ பெண்ணே கேள்
நீரிழிவு ஏகும் நெடுமோனம் மூலத்தால்
போரடர் கடுப்பு இரத்தம் போம்.

கிளை நுனியில் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்துக் கொத்தான வெள்ளை நிற மலர்களையும், முட்டை வடிவச் சத்தைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப் பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். இருப்பை என்றும் ஓமை என்றும் குறிப்பிடுவதுண்டு. இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசியுண்டாக்கும். சதை நரம்புகளை சுருங்கச் செய்யும். காமம் பெருக்கும். தும்மலுண்டாக்கும். விதை நோய் நீக்கி உடல் தேற்றும். பிண்ணாக்கு வாந்தியுண்டாக்கும்.

1. இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்.

2. இலுப்பைப் பூ 50 கிராம் எடுத்து அரைலிட்டர் நீரிலிட்டு 20 மி.லி.யாகக் காய்ச்சி வடிகட்டிக் காலை மட்டும் இரண்டு மாதங்கள் சாப்பிட மதுமேகம் குணமாகும்.

3. 10 கிராம் 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர தாது பெருகும். காய்ச்சல், தாகம் குறையும்.

4. பச்சைப் பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளிக்கச் சொறி சிரங்குகள் ஆறும்.

5. இலுப்பை எண்ணெயை இளஞ்சூடாக்கி தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

6. 10 கிராம் பிண்ணாக்கை நீர் விட்டரைத்து 50 மி.லி. நீரில் கலக்கி விஷம் சாப்பிட்டவர்களுக்குக் கொடுக்கக் கொடுக்க வாந்தியாகி நஞ்சுப் பொருள் வெளியாகும்.

7. பிண்ணாக்கு, வேப்பம்பட்டை, பூவரம் பட்டை எல்லாம் சம அளவு எடுத்துக் கருக்கி அந்த எடைக்குக் கார்போக அரிசியும் மஞ்சளும் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பிக் குழந்தைகளுக்கு வரும் மண்டைக் கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவற்றுக்குத் தடவ விரைவில் ஆறும்.

8. பிண்ணாக்கு அரைத்து அனலில் வைத்துக் களியாக்கி இளஞ்சூட்டில் விரை வீக்கத்திற்குக் கட்ட குணமாகும். 4,5 முறைகளில் தீரும்.






Sunday, October 2, 2011

25. தினம் ஒரு மூலிகை - இலந்தை

25. இலந்தை
(தாவரவியல் பெயர் : Ziziphus mauritiana lamk )

" பித்தம் மயக்கம் ருசி பேராப் பெரும் வாந்தி
மொத்த நிலம் எல்லாம் முடிந்திடுங்காண் மெத்த
உலர்ந்த வெறும் வயிற்றில் உண்டால் எரிவாம்
இலந்தை நறுங்கனியை எண்.

வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ இலைகளும் உடைய சிறுமரம். புளிப்புச் சுவையுடைய உண்ணக கூடிய பழங்களை உடையது. இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், வேர், பட்டை பசி தூண்டியாகவும், பழம் சளியகற்றி, மலமிளக்கி, பசித் தீயை அதிகப் படுத்தவும் பயன்படுகிறது.

1. இலை ஒரு பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 எல்லாம் சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் கோளாறுகள் நீங்கிக் குழந்தைப் பேறு கிட்டும்.

2. இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம்பட்டை 40 கிராம் எடுத்து நன்கு இடித்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து 125மி.லி.யாக்கி தினமும் நான்கு வேளை குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு தீரும்.

3. இலந்தை வேர்ப்பட்டைச் சூரணம் நான்கு சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.

4. துளிர் இலை அல்லது பட்டையை 5 கிராம் அளவு எடுத்து நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலை கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்த பேதி தீரும்.